Saturday, February 16, 2013

மக்கள் இசை தந்தாரா, ராஜா?


ஆயக்கலைகள் அறுபத்து நான்கு என்று சொல்லும்போது, அக்கலைகளில் தலையாயது இசை. ஏனெனில் இசை என்பது எல்லா மக்களின் உணர்விலும் கலந்து இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் தள்ளாத வயதினர் வரை இசை ஒவ்வொருவருடைய வாழ்விலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்றால் மிகையல்ல. அதுவும் நம் நாட்டில் திரையிசையின் பங்கு எத்தகையது என்று நாம் எல்லோரும் அறிவோம்.எந்தக் கலையும் மக்களிடையே சென்று சேர்ந்தால் தான் அது அதற்குரிய சிறப்பையும் பெருமையையும் பெற முடியும். திரையிசையை மக்கள் இசையாக தந்தவர் நம்முடைய ராஜா அவர்கள். மக்கள் அவருடைய இசையில் தங்களை அடையாளம் கண்டுக்கொண்டார்கள். அதனாலயே ராஜா இமாலய வெற்றி பெற முடிந்தது. அவரின் சில பல பாடல்களைக் கொண்டு அவர் எவ்வாறு அதை சாதித்திருக்கிறார் என்று அலசுவதே இப்பதிவின் நோக்கம்.

           1931ல் வந்த காளிதாஸ், தமிழ் திரையுலகில் வந்த முதல் பேசும் படம். அப்போதைய காலக்கட்டத்தில்  தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா போன்றோர் கோலோச்சினர். இவர்களின் பாடல்கள் பெரும்பாலும் கர்னாடக இசையை பின்பற்றி இருந்தது. அதனால் மேல்தட்டு மக்களை மட்டுமே சென்று சேர்ந்தது. திரு.என்.எஸ்.கிருஷ்ணன் டி.எம்.மதுரம் ஜோடி ஜனரஞ்சக பாடல்களைத் தந்தாலும் அவை கீழ்த்தட்டு மக்களையே சென்றடைந்தது. இசையமைப்பாளர்களை எடுத்துக்கொண்டால் சுப்பையா நாயுடு, சுதர்சனம், ஜி. ராமனாதன் போன்றோர் முடிசூடா மன்னர்களாய் வலம் வந்தனர். இவர்களும் கர்னாடக இசையையே முன்னிறுத்தினர். பின்னர் வந்த கே.வி.மகாதேவன் அவர்கள் கர்னாடக இசையோடு மெல்லிசை பாடல்களையும் தந்தார். 1952ல் கலைவாணர் அவர்களால் பணம் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட எம்.எஸ்.வி ராமமூர்த்தி ஜோடி  பெரும்பாலும் மெல்லிசை பாடல்களைத் தந்து மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டத்தையும் பெற்றனர். விஸ்வநாதன் ராமமூர்த்தி ஜோடி பல நல்ல பாடகளைத் தந்தனர் என்பதை மறுக்க முடியாது. மக்களும் ரசித்தனர். அந்த ரசனையானது பாடல்கள், திரைப்படங்கள் என்ற உறவோடு நின்று போனது. ஆனால் ராஜாவின் இசையில் மக்கள் தங்களை -- தங்கள் காதலை, காமத்தை, கோபத்தை, இயலாமையை, வெற்றிக்களிப்பை,தோல்வியை --- அடையாளப்படுத்திக்கொண்டனர்.கவிக்குயில் படத்தில் ஸ்ரீதேவி, சிவகுமாரிடம் என்னுடைய உள்ளத்தில் இருக்கும் இசையை இசைக்க முடியுமா என வினவ, முதலில் தோற்று பின்னர் அப்பெண்ணின் உள்ளத்தில் இருக்கும் இசையை இம்மிப் பிசகாமல் வாசிப்பார். அப்போது ஸ்ரீதேவி உள்ளத்தில் தோன்றும் பூரிப்பு போன்று, மக்களும் ராஜாவின் இசையானது தங்களின் உள்ளத்தின் ஆழத்தில் ஒளிந்துக்கொண்டிருக்கும் உணர்வுகளைப் பிரதிபலிக்க செய்ததால் புளாங்கிதம் அடைந்தனர்.

எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளிலும் தமிழ் திரைப்படங்கள் வேறொரு பரிமாணத்திற்கு சென்றன. படப்பிடிப்புத் தளங்களை விட்டு, மக்கள் புழங்கும் இடங்களுக்கு நகர்ந்தது அக்காலக்கட்டத்தில் தான். பிரபல எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளை திரைவடிவமாக கொண்டுவர படைப்பாளிகள் அப்போது மிகுந்த ஆர்வம் கொண்டனர். ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், சுஜாதா போன்றோரின் படைப்புகள் திரைப்படங்களாய் மக்கள் முன்னர் விரிந்தன. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், புதுமைப்பித்தனின் சிற்றன்னை போன்றவற்றை உதாரணங்களாய் சொல்லலாம். சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்றவை படமாக்கப்பட்டபோது அப்படங்களில் ஜெயகாந்தனே தெரிந்தார். புதினங்களைப் படித்தவர்கள் இது மாதரியான படங்களை ரசிக்க முடியும். ஆனால் பாமர மக்கள், புதினங்கள் பற்றி எந்த விவரமும் அறியாமல் படங்களைப் பார்க்க வரும் போது அவர்களை அப்படங்களின் களத்துக்கு அழைத்துச் செல்ல உயிரோட்டமான இசை தேவை. அதை ராஜா மிக அருமையாக செய்தார். உதாரணத்திற்கு மகேந்திரன் அவர்கள் புதுமைப்பித்தனின் சிற்றன்னை நாவலை உதிரிப்பூக்கள் என்ற திரைக்காவியமாகக் கொண்டுவந்தபோது அதில் ராஜாவே முன்னின்றார். புதுமைப்பித்தன் அவர்களையோ இல்லை வேறு எந்த எழுத்தாளரையோ மட்டம் தட்டுவது அல்ல என் நோக்கம். அவர்களின் எழுத்து வலிமையை தமிழகமே அறியும். அவர்களின் எழுத்து, திரைவடிவம் பெறும்போது உண்டாகும் சூழலையே நான் விளக்க முற்படுகிறேன். சுஜாதாவின் ”கரையெல்லாம் செண்பகப்பூ”வில் ராஜாவின் இசையே இன்று வரை பேசப்படுகிறது. மகேந்திரனின் முள்ளும் மலரும் படம், (திருமதி உமா சந்திரன்) ராஜாவின் இசையில் அடைந்த பிரமாண்டம் எல்லாரும் அறிந்த வரலாறு. அவரின் ”நண்டு”ம் சிவசங்கரியின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதே. மக்களால் ஏகோபித்த ஆதரவு பெற்ற புதினங்கள் படமாக்கப்படும்போது, திரைக்கதை மிக சிறப்பாக அமையவேண்டும். அத்திரைக்கதைக்கு இசையமைக்கும் போது அப்புதினங்களின் கருவானது பின்னணி இசை, பாடல்கள் போன்றவற்றால் மக்களுக்கு சிறப்பாக எடுத்து சொல்லப்படவேண்டும் என்ற நோக்கத்தில் ராஜா மிக கவனமாக செயல்பட்டதால் தான், அவரின் இசை இன்று வரை பேசப்படுகிறது. புதினம் படிக்காத எத்தனையோ பேருக்கு அப்புதினங்களின் வாசத்தை நுகர வைத்த பெருமை(திரைப்படங்கள் மூலம்) ராஜாவை சாரும்.

           மனதிலிருக்கும் சொல்லமுடியாத உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்தது ராஜாவின் இசையே. அவரின் இசையைப் பற்றி பேச ஆரம்பித்த ஆணும் பெண்ணும் கால ஓட்டத்தில் காதலராய் மாறிய அற்புதமும் உண்டு. இது எப்படி சாத்தியமானது என்று அலசினால், இருவரின் உள்ளங்களிலும் குடிகொண்டிருக்கும், மறைந்துக் கொண்டிருக்கும் ஆழமான, நுட்பமான விடயங்களை இவரின் இசையென்னும் மயிலிறகு வருடி சிலிர்க்க வைத்ததால் உண்டானது என்ற உண்மையை அறியலாம். காதலர்கள் தங்களுக்குள் வார்த்தை பரிமாற்றத்தை நிறுத்தி பாடலால் பேசி கொண்ட அற்புதம் ராஜாவின் இசையால் 80களில் அரங்கேறியது.’காலம் மாறலாம் நம் காதல் மாறுமோ’ பாடல் காதலர்களின் தேசிய கீதமானது. காதலர்களுக்கு அப்போது கிடைத்த பாடல்கள் போன்று இனி எக்காலத்திலும் கிடைக்காது. இன்னும் சொல்ல போனால் காதலர்களின் பொற்காலம் என்று 80களைச் சொல்லலாம். தரிசனம் கிடையாதா, என் மேல் கரிசனம் கிடையாதா? என்று ராஜாவின் குரலில் ஒலிக்கும்  காதலின் இன்ப வலியை காதல் மணம் புரிந்து, பிள்ளை பெற்று, அவர்களுக்கும் திருமணம் செய்த வைத்த பின்னும் உணர முடிகிறதென்றால், அவரின் இசை நம் இசையன்றி வேறேது?

விரகதாபத்துக்கு ”நிலா காயுது நேரம் நல்ல நேரம், நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்” , சமூகக் கொடுமைகளைக் கண்டு கொதிக்கும் நெஞ்சுக்கு  ”மனிதா, மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்”, வாழ்க்கையின் நிதர்சன உண்மைக்கு ”கனவு காணும் வாழ்க்கை யாவும், கலைந்து போகும் கோபங்கள்” என்று அடுக்கிக்கொண்டே போகலாம். டீக்கடைகளில் ஒலிக்கப்படும் பாடல்கள், சபாக்களில் இசைக்கப்படும் பாடல்கள், ஆடம்பர கார்கள், பேருந்துகளில் கேட்கப்படும் பாடல்கள், திருமண நிகழ்ச்சிகளில் பாடப்படும் பாடல்கள், கேளிக்கை விடுதிகளில் தழையவிடப்படும் பாடல்கள் என்று பாடல்கள் பாகுபடுத்தப்பட்ட காலங்களில் எல்லா இடங்களிலும் ஒலிக்கப்பட்டு, எல்லா தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்டு, கொண்டாடப்பட்ட உன்னதமான இசை ராஜாவுடையது. தன்னுடைய உணர்ச்சிகளுக்கு அவர்களே கம்போஸ் செய்தது போல ராஜாவின் இசையை மக்கள் உணர்க்கிறார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று? மக்களின் உணர்வு நரம்புகளை மீட்டி, அவற்றால் வந்த இசையை கொடுத்ததால் தான்!


          கவியரசர் கண்ணதாசனின் “ போனால் போகட்டும் போடா”, “ வீடு வரை உறவு, வீதி வரை மனைவி” போன்ற பாடல்களை இன்று வரை மக்களால் நினைவுப்படுத்தி பார்க்க முடிகிறதென்றால் அதற்கு காரணம் அப்பாடல்கள் மக்களின் வாழ்வாதார நிகழ்வுகளை உரைத்ததனால் தான். கவியரசர் “ஒரு 
கோப்பையிலே என் குடி இருக்கும்” என்று எழுதியது போல், ராஜாவும் “ ரசிகனே என்னருகில் வா” பாடலில் “ தெரிந்ததை நான் கொடுக்கிறேன், தெம்மாங்கு ராகங்களோடு, இதயங்கள் சில எதிர்க்கலாம், எதிர்த்தவர் பின்பு 
ரசிக்கலாம்” என்று பாடினார். சூழலுக்கான பாடல் தான் இது என்றபோதிலும் அவரின் இசை வளர்ச்சியை, அவர் கடந்து வந்த இன்னல்களை இப்பாடல் திறம்பட விளக்கியது.

           ராஜாவின் பாடல்களில் இருக்கும் தனிப்பட்ட முத்திரை அவரின் தனித்துவத்தை அவரை மக்களிடையே மிக எளிதாக இழுத்து சென்றது. இந்தியிலிருந்து வந்து தமிழில் இசையமைத்த எல்லோரிடத்தும் இந்தி சாயல் மிகவும் வெளிப்படையாக அவர்களின் பாடல்களில் தெரியும். குறிப்பாக 1960களில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தப் படங்களில் இசையமைத்த வேதா அவர்கள் ஹிந்தி பாடல்களின் ட்யூன்களை அப்படியே தமிழில் பயன்படுத்தினார். மேலும் ஆங்கிலத்தில் வந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களின் பின்னணி இசையே இவரின் பின்னணி இசையாக இருந்தது. தமிழில் ஒரு மாதிரி இசை, மலையாளத்தில் வேறு மாதிரி இசை, கன்னடத்தில், தெலுங்கில், இந்தியில் என ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொருவிதமான இசை, ஒவ்வொருவிதமான நடை என்று கம்பீர உலா வந்தார் ராஜா. ஒவ்வொரு மொழிக்கான கலாசாரத்தை அவருடைய பாடல்களில் காணலாம். “தும்பி வா” என்ற பாடலுக்கான மெட்டு தமிழுக்குப் போடப்பட்டிருப்பினும் அதை மலையாள மொழியில் உபயோகப்படுத்திய போது, அங்கு பெருவெற்றி பெற்றது என்றால் அது ராஜா எல்லா மொழி  மக்களின் நாடித்துடிப்பை அறிந்திருந்தார் என்றே அர்த்தம்.மலையாள திரையுலகின் மிக சிறந்த தாலாட்டுப் பாடலாக “அல்லி இளம்பூவோ” என்ற பாடல் இன்று வரை இருக்கிறது. தாத்தா, பேரன் பாசத்தை “உணருமே கானம்” பாடல் போன்று மலையாளத்தில் காண முடியாது. ”உணருமே கானம்” பாடல் மலையாள மக்களிடையே தேசிய கீதமாகவே கொண்டாடப்படுகிறது. இப்பாடல் இல்லாது அங்கு நடைப்பெறும் எந்த இசைக்கச்சேரியும் நிறைவு பெறாது.  அதே போல் பாலு மகேந்திராவின் ’சத்மா’வில் வரும் “ஹே ஜிந்தகி” ஒரு மிக சிறந்த காதல் பாடலுக்கு உதாரணமாக இருக்கிறது. கன்னட மொழியில் “கீதா” திரைப்படமும், தெலுங்கில் “சாகர சங்கமம்” திரைக்காவியமும் ராஜாவின் இசைத்திறமைக்கு ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற கூற்றுக்கு இலக்கணமாய்  உள்ளன. எல்லா மொழிகளிலும், அம்மொழிக்கேற்ற சூழலில் இசையமைத்திருந்தாலும் அவர் பின்பற்றிய  பிரத்யேக Pattern அவரைத் தனியாக அடையாளம் காட்டியது.சில நிமிடம் கேட்டவுடனேயே “அட, இது நம்ம ராஜா போட்டது தானே!” என்று மக்கள் அடையாளம் காணும் வண்ணம் இருந்தது. அவரது Patternஐ அவருக்கு முன்பு திரையுலகிற்கு வந்த இசையமைப்பாளர்களும் பயன்படுத்தத் தொடங்கினர். எடுத்துக்காட்டாக “ஜெர்மனியின் செந்தேன் மழையே” பாடலை ஒற்றி சங்கர் கணேஷ் “நெஞ்சிலே துணிவிருந்தால்” படத்தில் “சித்திரமே உன் விழிகள்” பாடலை அமைத்தார். அது மட்டுமன்றி அக்காலக்கட்டத்தில் வந்த நல்ல பாடல்கள் சிலவற்றை பிற இசையமைப்பாளர்கள் இசையமைத்திருப்பினும் அவைகளை ராஜா தான் இசையமைத்திருப்பார் என்ற எண்ணம் பெருவாரியான மக்களிடையே உருவாகக் காரணம், ராஜாவுடைய Patternஐ அவர்கள் பயன்படுத்தியதே காரணம்.

           எம்.எஸ்.வி காலக்கட்டத்தில் Prelude, I interlude & II interlude ஆகிய அனைத்தும் ஒரே மாதிரியாக தான்(மிக பெரும்பாலும்) இருக்கும். ஆனால் ராஜா இந்தச் சம்பிரதாயத்தை உடைத்தெறிந்து Preludeக்கு ஒரு இசை, 
I interludeக்கு ஒரு இசை, II interludeக்கு மற்றொரு இசை என்ற மரபை வெற்றிகரமாய் நிலைநாட்டினார்.  அதே போல் பின்னணி இசை என்று எடுத்துக்கொண்டால் கர்ணன், நெஞ்சம் மறப்பதில்லை, புதிய பறவை போன்ற பிரமாண்ட படங்கள் அல்லது பெரிய பேனர் தயாரிப்புகளில் தான் கொஞ்சம் வெளியே தெரியும். ராஜாவின் காலத்தில் யார் இயக்குனர், யார் தயாரிப்பாளர், யார் நடிக நடிகையர் என்ற பாகுபாடே கிடையாது. கதை களத்துக்கு பொருத்தமான இசை, சூழலுக்கு தேவையான இசை என்பதே ராஜாவின் தொழில் தர்மமாய் இருந்தது, இருக்கிறது. அவரின் இசையில் கோரஸ் எவ்வாறு அமைந்திருக்கிறது என்று ஆராய்ந்தால் அதிலும் அவர் புகுத்திய புதுமை ஏராளம். கோரஸுக்கென்றே தனிப்பதிவு போடுமளவிற்கு அவர் பல உத்திகளை கையாண்டுயுள்ளார். உதாரணத்திற்கு உல்லாசப் பறவைகள் படத்தில் வரும் “தெய்வீக ராகம், தெவிட்டாதத் தாளம்” பாடலில் வரும் கோரஸ் மற்றும் “அடி ஆடு பூங்குயிலே” பாடலிலும் வரும் கோரஸும் பாமர மக்கள் பாடினால் எப்படியிருக்குமோ அவ்வாறே அமைந்தது. அவருக்கு முந்தையக் காலக்கட்டத்தில் கோரஸ் என்பது இனிமையாக இருக்கவேண்டும், நல்ல குரல் வளம் இருப்போர் மட்டுமே பாட வேண்டும் என்ற கருத்தில் இசையமைப்பாளர்கள் உறுதியாயிருந்தார்கள். ஆனால் நம்முடைய ராஜா மக்கள் கலைஞர் ஆயிற்றே! எனவே பாமர குரலை முன்னிலைப்படுத்தினார். “அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே”, “மைனா மைனா மாமன் புடிச்ச மைனா” “அண்ணனுக்கு ஜே! காளையனுக்கு ஜே!”, “ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்”, “ஆசையைக் காத்துலே தூது விட்டேன்”, “மனிதா மனிதா” போன்றவை சில உதாரணங்கள்.

          கர்னாடக இசைக்குப் பயன்படுத்தப்படும் நாதஸ்வரம், வீணை புல்லாங்குழல், தவில் போன்ற வாத்தியங்களே பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்பட்ட காலங்களில் Cello, Bass Guitar, Acoustic Guitar, Drums போன்ற கருவிகளாலும் சிறப்பானதொரு இசையைக் கொடுக்கமுடியம் என நிரூப்பித்தவர் ராஜா. இக்கருவிகள் மக்களிடையே அடையாளம் காணப்பட்டதும் இவரின் இசையால் தான்.மேலும் அக்காலத்  திரைப்படங்களில் நடிக நடிகையர் அந்த இசைக்கருவிகளை உபயோகப்படுத்துவதாகக் காண்பிப்பார்கள். அதனாலேயே மக்களுக்கு அந்த குறிப்பிட்ட  இசைக்கருவிகள் பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிந்தது.ஆனால் ராஜா காலத்தில் Record, Radio போன்ற ஊடகங்களில் கேட்கும் போதே மக்கள் இசைக்கருவிகளை அடையாளம் கண்டுக்கொண்டனர்.  இது  இது  இந்த வாத்தியம் என்று மக்கள் பரிச்சியம் காட்டுகிறார்கள் என்றால், அவர் மக்கள் இசை தந்தார் என்பதால் தான். Light Music என்ற ஒரு அமைப்பு பிரபலமடைந்ததே ராஜாவின் வருகைக்குப் பின்னர் தான். இசையால் பிழைப்பு நடத்த முடியும் என்ற நம்பிக்கையை ராஜாவின் இசை வித்திட்டது என்றால் அது மிகையாகாது. 

          ராஜாவின் இசை சாதி, மத, இனப் பேதமின்றி எல்லாத் தரப்பு மக்களிடையேயும் சென்று சேர்ந்துள்ளது. சிந்து பைரவி போன்ற கர்னாடக இசையை மையப்படுத்தியப் பாடல்களை கிராமத்தினரும் ரசித்தனர். ஒவ்வொரு டீக்கடையிலும் அப்படப்பாடல்கள் ஒலித்தது. அதே போன்று சின்ன கவுண்டர், கரகாட்டகாரன், பதினாறு வயதினிலே போன்று கிராமிய கதைகளைத் தழுவி வந்த பாடல்களும் எல்லா பெருநகரங்களிலும் ரசிக்கப்பட்டது. பல கர்னாடக இசைக்கலைஞர்கள் இப்பாடல்களில் உள்ள இசை நுணக்கங்களை பல ஊடங்களில் சிலாகித்து பேசியுள்ளனர். சுருக்கமாக சொன்னால் இவரது இசை  டீக்கடைகளிலும் ஒலித்தது, அன்றைய சொகுசு ’கார்’ ஆன  MARUTHI 1000லிலும் ஒலித்தது.

          ஒவ்வொருவருடைய வாழ்விலும் தாத்தா, பாட்டி, தாய் தந்தை, மகன், மகள் என்ற உறவுகள் வரும். சில காலங்களுக்குப் பின் இவற்றில் ஏதேனும் சில உறவுகள் மறையலாம், புதியதாகவும் துளிர் விடலாம். ஆனால், காலத்தால் அழியாமல் நம் வாழ்வில் தொன்றுத் தொட்டு ஒன்று வருகிறது, வர முடியும் என்றால் அது நம் ராஜாவின் இசை மட்டும் தான். இவரின் இசை நம் வாழ்வை விட்டு விலகுகிறது என்று சொன்னால் அது நம் ஒவ்வொருவருடைய மறைவின் மூலம் தான் நிகழும் என்பது நிதர்சனம். நான் இவரது இசைக்கு ரசிகன் என்று கூறிக்கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன், கர்வமும் கொள்கிறேன்.

Saturday, January 12, 2013

ராஜா கவிஞர்களைப் புகழச் சொல்கிறாரா?


     ராஜாவுடைய பாடல்களில் அவரை பற்றிய பெருமை தூக்கலாக இருக்கும், இதை வேண்டுமென்றே ராஜா ஊக்குவிக்கிறார் என்ற குற்றச்சாட்டு, சில மூடர்களால் பரப்பப்படுகிறது. அது எந்தளவு கடைந்தெடுத்த பொய் என்பது ஒரு சாமான்யனான எனக்கு புரிந்த உண்மைகளை சொல்லுவதே இப்பதிவு.
     ராஜா அவர்கள் டிசம்பர் 23,2012 கோவையில் நடந்த இசை மாலை நிகழ்ச்சியில், இயக்குனருக்கு சரியாக தமிழ் தெரியாததால், ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு இது என் தாயை பற்றிய பாட்டு என்று சொல்லவும், “சரி, இதுவே இருக்கட்டும்” என்று இயக்குனர் ஆமோதித்ததாக சொன்னார். ஆனால், என்னை பொறுத்தவரை ராஜா இதை விளையாட்டாக சொன்னதாக தான் பட்டது. சரி, சூழலுக்கு வருவோம். படத்தில் 13 வயதே நிரம்பிய பெண், ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள். இதற்கு வாலி “சின்னத்தாய் அவள் தந்த ராசாவே” என்று பல்லவி எழுதுகிறார். அஃதாவது சின்ன பெண், 13 வயது பெண், தாயாகிறாள், எனவே தான் சின்னத்தாய் என்ற வார்த்தை இடம்பெறுகிறது. எந்த குழந்தையையும் அவர்தம் பெற்றோர், “ராஜா மாதிரி இருக்கேடா, ராணி மாதிரி இருக்கேடி” என்று தான் கொஞ்சுவார்கள். இது செல்வந்தர்க்கும் பொருந்தும், ஏழைகளுக்கும் பொருந்தும். எனவே தான் “சின்னத்தாயவள் தந்த ராசாவே” என்ற வரிகள் அந்த சூழலுக்கு எழுதப்பட்டது. இதில் எங்கே ராஜாவின் புகழ் பாடப்பெறுகிறது?
     ”நிழல்கள்” படத்தின் சூழலை பார்ப்போமா? ஒரு இளைஞன் இசையமைப்பாளர் வாய்ப்பை தேடி பலவாறு அலைகிறான். அவனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது, அவனின் முதல் பாடல் ஒலிப்பதிவாகிறது. அவன் கொண்ட அளவிடாத மகிழ்ச்சியை தான் வாலி அவர்கள் “மடை திறந்து பாயும் நதியலை நான்” என்று எழுதுகிறார். அந்த இசையமைப்பாளன், புது ராகங்களை படைப்பதால் தன்னை ராக  இறைவன் என்று நினைக்கிறான், மேலும் அந்த இசையமைப்பாளன் அவனுடைய ரசிக பட்டாளத்தை தன்னுடைய இசையால் கட்டிவைக்க ஆசைப்படுகிறான். எனவே தான் “ புது ராகங்கள் படைப்பதால் நானும் இறைவனே” மற்றும் “ இசைக்கென இசைகிற ரசிகர்கள் ராஜ்ஜியம் அமைப்பேன், நான்” என்ற வரிகள் இடம்பெறுகிறது. அந்த இசையமைப்பாளன், ராஜாவை அவன் பாடலுக்கு பாட வைக்கிறான். இவ்வரிகள் சூழலுக்கு எழுதப்பட்டதேயன்றி தனி நபர் துதி பாடுவதன்று. இவ்வரிகள் ராஜா மீது வாலி கொண்டிருக்கும் அபரிதமான அன்பை வெளிப்படுத்துகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது  இசையமைப்பாளர் ஆவதற்கு வாய்ப்பு தேடி ராஜா பட்ட கஷ்டங்கள்  வாலி மனதில் நிழலாடியதால் அமைந்திருக்கலாம். அஃதாவது  ராஜா போன்றே சந்திரசேகர் கதாபாத்திரம் கடின உழைப்போடு வாய்ப்பு தேடி அலைந்து அலைந்து பின்னர் வாய்ப்பு கிடைக்கும் போது அவனது மனநிலை எவ்வாறு இருக்கும் என்று யோசித்து எழுதப்பட்டதே  அப்படல் வரிகள். பாடல் வரிகள் எழுதும் போது சூழலுக்கு தான் எழுதப்பட்டிருக்கும், எழுதப்படவேண்டும். பின்னர் அப்பாடல் படமாக்கப்படும் போது, பாரதிராஜா இவ்வரிகள் ராஜாவுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது என்று நினைத்து அவரை காட்டியிருக்கலாம். எனவே ராஜா தன்னை புகழ்ந்து கொள்வதற்காக அப்பாடல் வரிகளை எழுத சொன்னார் என்று சொல்வது அபத்தம்.
     பாலுட்டி வளர்த்த கிளி திரைப்படத்திற்கு கொல கொலயா முந்திரிகாய் பாடலில் “வா ராஜா வா” என்ற வரியை கவியரசர் கண்ணதாசன் எழுதினார். அப்போது ராஜா ஏனிந்த வரி என்று வினவ நான் உன்னை வரவேற்கவே இவ்வரி எழுதினேன் என்று சொன்னாராம்.பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு சட்டம் என் கையில் படத்திற்கு ”ஆழகடலில் தேடிய முத்து” பாடலில்  ”எங்க ராஜா கண்ணு,ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு” என்ற வரியை எழுதினார். பிறந்த குழந்தையின் தாலாட்டு பாட்டு போன்ற சூழலுக்கு எழுதப்பட்டதே இப்பாடல். பெற்றோருக்கு அவர்தம் மழலை உலகிலேயே கிடைக்காத பொக்கிஷம் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு. அவ்வியல்பிற்கு சான்றே இவ்வரிகள். கவியரசர் கண்ணதாசன் ராஜாவை புகழ்ந்து வரிகள் எழுதி பிழைக்கவேண்டும் என்ற நிலையில் இல்லை. ஆனால் அச்சூழலுக்கு அவர் வரிகள் ராஜாவுக்கு பொருத்தமானதாக அமைந்ததெனில், அது ராஜாவின் கடின உழைப்பு, கூரிய இசையறிவு, ஆளுமைத்திறன்,அர்ப்பணிப்பு போன்றவற்றை கண்கூடாக கவிஞருக்கு தெரிந்ததால் அவர் ராஜாவை பாராட்டும் விதமாகவும், அங்கீகரிக்கும் வகையிலும் அதே சமயத்தில் சூழலுக்கு பொருந்தும் வகையில் எழுதியிருக்கிறார் என்றே அர்த்தம். மீண்டும் சொல்கிறேன், ராஜாவை துதி பாடவில்லை, அவரின் திறமையை பாராட்டுகிறார். கூச வைக்கும் புகழ் மொழிக்கும், உண்மையான பாராட்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.
          ராஜா கையை வைத்தா அது ராங்கா போனதில்லை, ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா போன்ற பாடல்களும் சூழலுக்கு எழுதப்பட்டவையே. இவரை புகழ்ந்து பாடப்பெற்ற பாடல் என்றால், வரவும் செலவும் இரண்டுமின்றி வரவும் செலவும் உண்டு, மானும் மீனும் இரண்டுமின்றி மானும் மீனும் உண்டு என்ற வரிகள் எவ்வகையில் ராஜாவுக்கு பொருந்தும்? அது எப்படி இவர் இசையமைத்த பாடல்களில், ஆங்காங்கே ராஜா என்ற சொல் வருகிறது, இவர் விரும்பாமலா அவ்வாறு அமைகிறது என்ற ஐயம் எல்லாருடைய மனதில் எழும். அவர் விருப்பப்படாமலேயே அவ்வாறு அமைந்திருக்கிறதெனில் அது முழுக்க முழுக்க ராஜா மீது கவிஞர்களுக்கு ஏற்பட்ட பிரமிப்பின் வெளிப்பாடேயாகும். அவருடைய மேதைமைக்கு கவிஞர்கள் சூடும் புகழ் மாலையே, அவர்கள் எழுதும் வரிகள். ராஜா என்ற பெயர் வரும் பாடல் வரிகளை பெரும்பாலும் வாலி தான் எழுதியிருப்பார். வாலி பிழைப்புக்கு துதி பாடும் வகையறாவை சேர்ந்தவரல்லர். சூழலுக்கு பொருந்தியும், அதே சமயத்தில் “இக்கலைஞனுக்கு இவ்வளவு இசை ஞானமா” என்ற ஆச்சரியத்தையும் குழைத்து எழுதப்பட்டதே சிலரால் புகழ் மொழிகள் என்று சொல்லப்படும் வரிகள்.
     மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் என்ற வரிகளுக்கேற்ப, ராஜாவுக்கு புகழ் மாலைகள் விழுகிறது, அவர் மகத்தான, மாபெரும் கலைஞனாக இருப்பதால் தான். முதல் அறிமுகத்திலேயே பால் மரியா போன்ற வெளிநாட்டு இசை கலைஞனை, மேதையை ஒரு குக்கிராமத்தில் பிறந்த ஒருவர் ஈர்க்கிறார் என்னும் போது நம்மவர், நம் நாட்டினர் எவ்வாறு கொண்டாடுவர்? அதன் வெளிப்பாடே அவர் பெயர் இடம்பெறும் வரிகள். சத்யா படத்தில் வரும் ராகங்கள் தாளங்கள் நூறு, ராஜா உன் பேர் சொல்லும் பாரு என்ற வரிகள் இவ்வகையில் அமைந்தது தான். கவிஞர் வாலி  பத்ரகாளி படத்தில் எழுதிய கண்ணன் ஒரு கைக்குழந்தை, கண்கள் சொல்லும் பூங்கவிதை பாடலில் “ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் உந்தன் சொந்தமம்மா வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா” என்ற வரிகள் அவருக்கும் ராஜாவுக்கும் இடையே இன்று வரை தொடரும் பந்தத்தின் தீர்க்கத்தரிசன வரிகளே.
     M.S.V அவர்கள் இசையமைத்த சுகமான ராகங்கள் படத்திற்கு Title Song பாடியவர் ராஜா தான். அந்த இசை மேதை ஏன் ராஜாவை அழைக்கவேண்டும்? எவ்வகையிலாவது ராஜாவின் மேன்மையை, உழைப்பை, எட்டிய உயரத்தை அங்கீகரிக்கும் M.S.Vயின் உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடே ராஜாவ அவர் பாட அழைத்தது.
     இப்போதிருக்கும் இந்திய இசையமைப்பாளர்களில் “Composer” என்ற அடைமொழி ராஜாவையன்றி வேறு யாருக்கும் பொருந்தாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் “Composer” என்ற பெருமை ராஜாவை தான் சேருமேயன்றி வேறு யார்க்கும் கிடைக்காது. இந்த கம்போஸரின் திறமை மீது கொண்ட அளவிடமுடியாத மரியாதை, மாண்பு, அன்பு, பூரிப்பு போன்றவற்றின் அடையாளமே நான் மேற்சொன்ன பாடல் வரிகள். பரிசில் பெற அரசர்களை புகழ்ந்து பாடும் வரிகளன்று,  மேன்மையான மேதைமை கொண்டோரை தான் பாடுகிறோம் என்று உணர்ந்து அறிஞர்களே தரும் பரிசே இவ்வரிகள்!!!
    
      
    

Sunday, January 6, 2013

இசை கலைஞர்களை ராஜா புறக்கணிக்கிறாரா?


பின்னூட்டங்களின் வாயிலாக என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தும்
நல்ல உள்ளங்களுக்கு என் கோடானுக்கோடி நன்றிகள்.

ராஜா ஏன் தன்னுடைய இசை கலைஞர்களை அவருடைய ஒலி நாடாக்களில், ஒலிப் பேழைகளில் முன்னிறுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் பொருட்டு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

பல வருடங்களாகவே ஒரு எழுத்தாளர் தன்னுடைய எழுத்துக்களில் ராஜா மீது கொட்டும் நெருப்பு என்னவென்றால், அவர் தன்னுடைய படைப்புகளுக்குரிய Credit அனைத்தையும் அவரே பெற்றுக்கொள்கிறார், அவருடைய இசை கலைஞர்களை அங்கீகரிப்பதில்லை, அவருடைய பாடல்களின்  CD, Cassette, LP Record  போன்றவற்றில் “இசை – இளையராஜா” என்று தான் இருக்கிறதேயன்றி, புல்லாங்குழல் இன்னாருடைய மூச்சு காற்று, கிடார் அன்னாருடைய விரல் வித்தை, வயலின் இவர் தான் வாசித்தார், வீணை மீட்டய பெருமகனார் இவரே என்று யாருடைய பெயர்களையும் போடாமல் அழிச்சாட்டியம் செய்கிறார் என்பதே. வேறு ஒரு இசையமைப்பாளருக்கு சர்வதேச விருது கிடைத்த போது, அவரை பாராட்டி எழுத ஒரு பிரபல வார இதழ் இவரை அணுக, இவரோ அந்த இசையமைப்பாளரை பாராட்டுவதை விட்டு, இளையராஜாவை திட்டுவதற்கு மட்டுமே அக்கட்டுரையை பயன்படுத்திக்கொண்டார். அவர் எடுத்துக்கொண்ட ”திட்டுப் பொருள்” இசை கலைஞர்களை ராஜா புறக்கணிக்கிறார் என்பதே. அவ்விருது பெற்றவர் மட்டுமே தன்னுடைய மகுடத்தில் அனைத்து கற்களையும் பொதித்து அழகு பார்க்கிறார், ராஜா அவ்வாறு இல்லை என்பதே அவரின் வாதம்.

சரி, கொஞ்சம் பின்னோக்கி பயணிப்போம். எவ்வளவோ இசை மேதைகளை தமிழ் திரையுலகம் சந்தித்திருக்கிறது. அதில் ஒருவர் 
திரு. எம்.எஸ் விஸ்வநாதன் அவர்கள். அவருடைய இசைக்குழுவில் பாடகர்கள், பாடகிகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் போன்றோருக்கு தெரிந்த ஒரே பிரபலமானவர் திரு. சதன் அவர்களே. இந்த இந்த இசைக்கருவிகளை இன்னார், இன்னார் தான் வாசிக்கிறார்கள் என்பது வெளியுலகத்திற்கு தெரியவில்லை.

மேலும் 1970ல் எம்.எஸ்.வி ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டார். ஆல்பத்தின் பெயர் M.S.V ORCHESTRATION. இந்த ஆல்பம் HMV நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த ஆல்பத்தில் எந்த இசைக்கலைஞர் பெயரும் வெளியிடப்பவில்லை. மேலும் இசை கலைஞர்களை  In Lay cardல் வெளியிடும் பழக்கம் தொன்று தொட்டு தமிழ் திரைவுலகில் இருந்தது இல்லை. கே.வி. மகாதேவன் இசையமைத்த படங்களில் “உதவி .. புகழேந்தி” என்று போடுவார்கள். அது போல விஸ்வநாதன் இராமமூர்த்தி படங்களில் உதவியாளர்கள் பட்டியலில் ஜி.கே. வெங்கடேஷ் பெயர் இடம்பெற்றது. விஸ்வநாதன் தனியாக இசையமைத்த படங்களில் தாஸ் டேனியல், கோவர்தனம், ஜோஸ்ப் கிருஸ்ணா போன்றோர் பெயரும், இடம்பெற்றிருந்தது. எவ்வளவோ பேர் விஸ்வநாதனிடத்து பணியாற்றியும் அவர் இசைக்குழுவில் அடையாளம் காணப்பட்ட நபர் சதன் மட்டுமே. 

ஆனால் ராஜாவிடத்து நிலைமை வேறு. இதற்கிடையில் ராஜா பெரும்பாலான இசையமைப்பாளர்களிடம் வாசித்து வந்தார், உதவியாகவும் இருந்தார். ராஜாவின் தனித்தன்மை, இசை ஆளுமை, திறமை ஆகியவற்றை அவர் வேலை புரிந்த இசையமைப்பாளர்கள் கண்கூடாக பார்த்தார்கள். அந்த திறமைக்கு சான்றாக திரு.கோவர்தன் இசையமைத்த வரப்பிரசாதம் திரைப்படத்திற்கு மட்டும் Title Cardல் இசை..கோவர்தன், உதவி … ராஜா என்ற அங்கீகாரம் கிடைத்தது . ஆனால் வி.குமாரின் இசையில் வந்த சில பாடல்கள் ராஜாவே இசையமைத்தது. ஆனால் ராஜாவின் பெயர் அப்படங்களின் Title Cardல் வெளிவரவில்லை. சினிமா துறை அவ்வாறு தான் இருந்தது.. இவ்விதமான School of Thought இருந்த காலத்தில் பணியாற்றிய ராஜா, தனி இசையமைப்பாளர் ஆன பின் தனக்கென ஒரு பிரத்யேக இசைக்குழுவை அமைத்துக்கொண்டார்.

‘Guitar           --- Mr.Sadanandam, Mr.Sasidhar
Tabla            --- Mr.Prasad,
Violin            --- Mr. Prabakar, Mr. Juddy
Keyboard         --- Mr. Viji Manuel
Drums           --- Mr. Purushothaman
Cello            --- Mr.Sekar
Flute            --- Mr. Napolean
Other Instruments   -- Mr.Jaycha Singaram
Chrorus          -- Mr.Saibaba,.
Other Help        -- Mr.Sundarrajan
போன்றோர் மேற்சொன்ன இசைக்கருவிகளோடு அடையாளம் காணப்பட்டார்கள். மேலும் அக்காலக்கட்டத்தில் பாடல் கேட்பதென்றால் பெரும்பாலானோருக்கு வாய்த்த, வயப்பட்ட ஒரே ஊடகம் வானொலி தான். InLay Cardல் இவர்கள் பெயர் இல்லாமல் இருந்தபோதே இக்கலைஞர்களை தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பாடகிகள், இயக்குனர்கள் அடையாளம் கண்டுக்கொண்டனர். 

மேலும் மக்களுக்கு வானொலி கேள்வி ஞானத்திலேயே எந்தெந்த இசைக்கருவிகள்,  பாடல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அடையாளம் கண்டுக்கொண்டார்கள். இது ராஜாவுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. புல்லாங்குழல் எது, வீணை எது, கிடார் எது, சிதார் எது என்று மக்கள் அடையாளம் கண்ட காலம் ராஜாவின் இசை பிரவேசத்திற்கு பின்பே. சரி, திரை கலைஞர்களுக்கு, திரை உலகு சம்பந்தப்பட்டவர்களுக்கு இக்கலைஞர்களை தெரியும், மக்களுக்கு தெரிந்ததா என்ற நியாயமான கேள்வி எல்லோர் மனதிலும் எழும். ராஜாவின் பாடல்களில் எல்லாவிதமான இசைக்கருவிகளும் பயன்படுத்தும் போது அவர் தனி தனியாக இவர் தான் இசைத்தார் என்று வெளியிடவில்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட கலைஞரின்  Solo Performance வரும்போது, அக்கலைஞரின் பெயரை முன்னிறுத்துவதில் ராஜா முன்னோடியாக இருந்திருக்கிறார். 

உதாரணமாக 1981ல் வெளிவந்த ராஜ பார்வை படத்தின் Recordல் வயலின் கலைஞர் திரு. வி.எஸ். நரசிம்மன்  பெயர் இடம்பெற்றிருந்தது. மேலும் புதிர் என்ற படத்தில் வரும் முதல் முத்தம் தான் என்ற பாடலின் Instrumental Version வாசித்தவரான திரு.சந்திரசேகர் ( திரு.புருஷோத்தம் அவர்களின் சகோதரர்) அவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.அவரின் பெயர் செல்வி படத்தில் வரும் இளமனது பாடலின் Instrumental Versionக்கும் இடம்பெற்றிருந்தது 

தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் Band Music, தில்லானா மற்றும் நாதஸ்வரம் ஆகியவற்றை வாசித்த மதிப்பிற்குரிய சேதுராமன் மற்றும் பொன்னுசாமி ஆகியோரின் பெயர் அப்படத்தின்  Title cardல் இடம்பெற்றது ஆனால் இப்படத்தின் 78 rpm (Revolutions per minute) Columbia Record மற்றும்  45 rpm Angel Recordல்  இவர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. ஆனால் 1981ல் இசை ஞானியின் இசையில்  வெளிவந்த கோயில் புறா படத்தின் Recordல் சேதுராமன் மற்றும் பொன்னுசாமி அவர்களின் பெயர் வெளிவந்தது.   

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் 1986ல் வெளியான “How to Name It” ஆல்பத்தில் இசை கலைஞர்களின் முழுப்பட்டியல் இருந்தது.


 மேலும் “Nothing But Wind” ஆல்பத்தில் புல்லாங்குழல் கலைஞர் செளராச்சியா பெயரும் இடம்பெற்றிருந்தது.

 என்ன சொல்ல வருகிறேன் என்றால், பாடல்கள் அல்லாமல் வெறும் இசைக்கருவிகளைக் கொண்டே நிகழ்த்தப்படும் எந்தவொரு arrangementக்கும் ராஜா அந்த கலைஞர்களுக்குரிய மரியாதையை செய்ய தவறியதில்லை. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எப்பேர்ப்பட்ட திறமையான இசைக்கலைஞரும், ராஜாவின் இசைக்குறிப்புக்களையே (Notes) வாசிக்கிறார், அந்த Notesக்குரிய இசை வடிவம், ஒலி அளவு ஆகியவற்றை கொண்டு வர மெனக்கெடுபவர் ராஜா மட்டுமே. அந்த இசை வடிவத்தை இன்னார் தான் கொண்டு வருவார் என்று தீர்மானிப்பவரும் ராஜா தான். எனவே அவர் கலைஞர்களை அங்கீகரிப்பதில்லை என்ற பொய் வாதம் எடுபடாது. அவ்வாறு அங்கீகாரம் கிடைப்பதால் தான் அன்னக்கிளியில் அவரோடு இணைந்து பணியாற்றிய இசை வல்லுனர்கள் இன்று வரை அவரோடு தொடர்கிறார்கள்.

இப்போதுள்ள இசையமைப்பாளர்களுக்கு தனியாக, பிரத்யேகமான இசைக்குழு என்ற ஒன்று கிடையாது, எனவே Cassette, CD Cardகளில் அவர்களுக்கு வாசிக்கும் நபர்களின் பெயரை வெளியிடுகின்றனர். அதுவும் அக்கலைஞர்கள், இசையமைப்பாளரின் “Notes”க்கு வாசிப்பதில்லை. உதாரணத்திற்கு நான் இசையமைக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், நான் என்ன செய்வேன் என்றால் கிடார் வாசிக்க வரும் நபரிடம், ”தன் தனா, லா லா லே ரம் பம் பம்” என்று பாடிக் காட்டி, இதற்கு வாசிக்க வைப்பேன். அவ்வாறு வாசித்தப்பின் அதை கணினியில் மிக்ஸ் செய்து, பவுடர், பூ, மை எல்லாம் இட்டு ஒரு மாதிரி output வர வைப்பேன். எனவே அந்த கிடார் கலைஞனின் பெயரை நான் வெளியிட வேண்டும்.

ஆனால், ராஜா அப்படியல்ல, என்னென்ன வாத்திய கருவிகள் வேண்டும், எந்த ஒலி வடிவம் வேண்டும், எந்த கால அளவுக்குள் அவை இருக்க வேண்டும் போன்ற மொத்த சமாச்சாரங்களையும் தீர்மானித்து அதற்குரிய Notes எழுதி, அதை முன்னின்று மேற்பார்வையிட்டு, ஒலிப்பதிவு வரை முடித்து வைப்பவர் ராஜா அவர்கள். 

மேலும் அவர் 2005 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் சென்னையில் ஜெயா டி.வி.க்காக நடத்திய நிகழ்ச்சிகளில் மேடையில் ஒவ்வொரு இசை கலைஞரின் பங்களிப்பையும், அவர்களின் சிறப்பையும் எடுத்துரைத்தார். அவர்கள் எவ்வளவு ஆண்டுகள் அவரிடம் பணியாற்றுகிறார்கள்  என்பதையும் உரைத்தார். தம்முடைய கலைஞர்கள் மட்டுமன்றி, ஹங்கேரி மட்டும் இங்கிலாந்து நாட்டு கலைஞர்களையும், அவர்களின் மேன்மையையும் விலாவாரியாக மேடைகளிலும், தொலைக்காட்சி பேட்டிகளிலும் அவர் என்றும் கூற தவறுவதில்லை.

இப்படிப்பட்டவரா  இசை கலைஞர்களை புறக்கணிக்கிறார், கவுரவிக்க தவறுகிறார் என்று சொல்கிறார்கள்? முடிவை உங்கள் மனச்சாட்சிக்கே விட்டு விடுகிறேன்.


Monday, December 31, 2012

ராஜாவால் அடையாளம் பெற்றவர்கள்


ராஜாவின் இசையால் பிரபலமடைந்த முகங்கள் பற்றிய பதிவு இது. அஃதாவது ஒரே ஒரு பாடலின் மூலம் இவர்கள் இன்று வரை ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள். வானொலியில், ஒலி பேழைகளில் சில பாடல்கள் கேட்கும்போது உடனே இவர்கள் முகம் நினைவுக்கு வரும். அதற்கு காரணம் நம்முடைய ராஜாவின் காலத்தால் அழியாத பாடல்கள் தாம். ஒரு பெரிய நடிகருக்கு, நடிகைக்கு அருமையான பாடல்கள் வாய்ப்பதில் ஏதும் வியப்பில்லை, ஆனால் நகைச்சுவை நடிகருக்கோ, குணச்சித்திர நடிகருக்கோ அவ்வாறு அமைந்தால் அது அவர்களின் பாக்கியமே! பெரிய பேனர் இயக்குனர்/தயாரிப்பு நிறுவனம், புகழ் பெற்ற நடிக/நடிகையர் இருந்தால் மட்டுமே ஒத்துக்கொள்ளும் இசையமைப்பாளர்கள்(அறிமுக இசையமைப்பாளர்களும் சேர்த்தி) மத்தியில் ராஜா புதியவர்களுக்கு ஒரு விலாசத்தை கொடுத்தார் என்பது உலகறிந்த சேதி. அப்புதியவர்கள் படங்களில் இடம்பெறும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள்  மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் வண்ணம் பாடல்களை தந்தவர் நம்முடைய இசை ஞானி.
கண்மலர்களின் அழைப்பதிழ் மற்றும் தீர்த்தக் கரை தனிலே

 என்ற பாடல்களில் மூலம் சக்கரவர்த்தி இன்று வரை அறியப்படுகிறார்.
கம்பர் ஜெயராமன்(திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர்) சித்திரை செவ்வானம் சிரிக்க கண்டேன் பாடல் மூலம் பிரபலம்.(படகோட்டுபவர்)

 ராஜிவ் உறங்காத நினைவுகள் படத்தில் வரும் மெளனமே பாடலில் நன்கு அறிமுகம் ஆகிறார். நிழல் தேடும் நெஞ்சங்கள் படத்தில் வரும் இது கனவுகள் விளைந்திடும் காலம் பாடலும் மிக பிரபலம். 

பானுசந்தருக்கு ஓ வசந்த ராஜா

 சுமனுக்கு என்றென்றும் ஆனந்தமே

 பிரதாப் போத்தன் என்றால் உடனே நினைவுக்கு வரும் என் இனிய பொன் நிலாவே என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

 மேலும் இப்போது தொலைக்காட்சி தொடர்களில் அதிகம் நடிக்கும் ராஜசேகருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது ”இது ஒரு பொன்மாலை பொழுது”

 நாடகங்களில் இப்போது பிரபலமாக இருக்கும் மற்றொரு பரிச்சிய முகமான அபிஷேக்குக்கு மோக முள் பாடல்கள் ஒரு முகவரியாக இருக்கிறது.

 ஜீப் ஓட்டிக்கொண்டே பாடும் பாடல் என்றால் சட்டென்று நினைவுக்கு வருகிறார் சரத்பாபு செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் மூலம்.

 சின்ன புறா ஒன்று என்றதும் தேங்காய் சீனிவாசன் தெரிகிறார்.

 பூவே செம்பூவே பாடலில் ராதாரவிக்கு கிடைத்த அடையாளம் பல ஆயிரம் படங்களில் நடித்ததற்கு சமானம்.

சிவச்சந்திரன் எத்தனை படங்களில் நடித்திருக்கிறார்/இயக்கி இருக்கார் என்றால் யாருக்கும் தெரியாது, ஆனால் அவர் முகம் மக்களுக்கு பரிச்சியமானதற்கு காரணம் உறவுகள் தொடர்கதை பாடலால் தான்.

 ஆசையே காத்துலே தூது விட்டேன் மூலம் இன்று வரை சுபாஷினி மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.

 படாபட் ஜெயலட்சுமி என்றதுமே நம் நினைவுக்கு வருவது “நித்தம் நித்தம் நெல்லு சோறு” தான்.

 நடிகை ஷோபாவிற்கு “அடிப் பெண்ணே” பாடல் மிக பிரபலம்.

 Female Solo என்ற genreஐ மிக பிரமாதமாக கையாண்டவர் ராஜா மட்டுமே. இதற்கு தனி பதிவு போடுமளவிற்கு ராஜா கையாண்ட புதுமைகள் ஏராளம்.
நகைசுவை நடிகரான ஜனகராஜூக்கு “காதல் என்பது பொதுவுடைமை”  நிரந்தர அடையாளம்.

 அவ்வண்ணமே ஆறும் அது ஆழம் இல்ல பாடல் சந்திரசேகருக்கு அமைந்தது.

 நடிகர் S.P.B அவர்களுக்கு மண்ணில் இந்த காதல் அன்றி பாடலை கொடுத்தார் ராஜா.

 மலையாள நடிகரான காலஞ்சென்ற திலகன் இன்றும் ஒரு பாடலால் பேசப்படுகிறார் என்றால் அது உணருமீ கானம் மூலமே. 

சோமையாஜூலுவுக்கு கனவு காணும் வாழ்க்கை யாவும் பாடல்.


என் உயிர் தோழன் படத்தில் வரும் இப்பாடலால் மட்டுமே தென்னவன் என்ற நடிகர் இன்று வரை அடையாளம் காணப்படுகிறார்


மேற்சொன்ன நடிகர்கள் இன்று வரை மக்கள் மனதில் சட்டென பாடல்கள் மூலம் நினைவுக்கு வர காரணம் இசை ஞானி இசையமைத்த  சாகா வரம் பெற்ற பாடல்களில் இடம்பெற்றதால் தான். இப்பாடல்களில் நான் சொன்ன பெரும்பான்மையான நடிகர்கள் அவர்கள் நடிப்பு திறனால் பேசப்படவில்லை. ராஜாவின் பாடலே இவர்களை பேச வைத்தது, நிலைக்க வைத்தது. நாளை இவர்கள் எதாவது பேட்டியில் இடம் பெறுகிறார்கள்  அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள் என்றால் இவர்களின் அடையாளமாக இப்பாடல்கள் ஒலிக்கும்.
மேலும் பிரபல நடிகர் எவருக்கேனும் 50 படங்களுக்கும் மேற்பட்டு பணியாற்றியவர் மற்றும் நூற்றுக்கணக்கில் பாடல்கள் தந்தவர் என்று இந்திய திரை வரலாற்றை  நோக்கினால் இசை ஞானி மட்டுமே கண்ணுக்கு தெரிவார். முரளி, கார்த்திக், ரஜினி, கமல், ராமராஜன்,மோகன் இந்தப் பட்டியலில் அடங்குவர். அதிலும் முக்கியமாக முரளி, கார்த்திக், ராமராஜன் போன்றோர் , ராஜாவின் பாடல்களால், அதிலும் அவர் குரலில் பாடிய பாடல்களால் தாம் பிரபலமடைந்தார்கள் என்றால் அது மிகையாகாது.
நடிகர்களால், இயக்குனர்களால் தயாரிப்பாளர்கள் உருவாக்கப்பட்ட வரலாறு உண்டு. ஆனால் ஒரு இசையமைப்பாளர் தயாரிப்பாளர்களை உருவாக்கினார் என்றால் அது சாத்தியப்பட்டது ராஜாவின் இசையால் தான். மேலும் ராஜாவின் இசையை மட்டுமே நம்பி வினியோகஸ்தர்கள் பலர் உருவான வரலாறு  தமிழ் திரையுலகில் தான் உண்டு. மேலும் சில வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களாய் மாறியதும் ராஜாவால் தான். இவர்களின் பட்டியல் மீக நீளம். உதாரணமாக கே.பி. பாலு (சின்ன தம்பி தயாரிப்பாளர்), டி. சிவா போன்றோரை சொல்லலாம். இது போன்ற ஒரு நிகழ்வு உலக சினிமாவிலேயே கிடையாது. மேலும் ஹீரோக்களை தோற்றுவித்த ஒரு இசையமைப்பாளர் என்ற பெருமையை ராஜாவே பெறுகிறார். முரளி, கார்த்திக், ராஜ்கிரண், மோகன், ராமராஜன் போன்றவர்கள் கதாநாயகர்களாய் வலம் வந்தார்கள் என்றால் அதற்கு ராஜாவின் இசையன்றி வேறேதுவும் காரணம் இல்லை. 
ஒலிப்பேழையில் வெறும் 1:56 நிமிடங்கள் மட்டுமே வரும் “ஒத்தை ரூபாய் தாரேன்” பாடல் நாட்டுப்புற பாட்டு என்ற படத்திற்கு பெரும் விளம்பரமாக செயல்பட்டதுமன்றி இன்று வரை அப்படத்திற்கு அதுவே அடையாளமாக இருக்கிறது.

இவ்வளவு ஏன் 1991ஆம் ஆண்டு வெளிவந்த படமான தளபதியில் இடம்பெறும் ராக்கம்மா கையை தட்டு பாடலின் இறுதியில் வரும் “குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயும்” வரிகள் அப்போதைய 10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் மனப்பாட பகுதியாக இருந்தது அப்பாடலால் என்னுடைய பல நண்பர்கள் ராஜாவால் தான் பொதுத் தேர்வில் அப்படியே பத்து மதிப்பெண் எடுத்தேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்ல கேட்டிருக்கிறேன்.
பொங்கலையும், ஆங்கிலப் புத்தாண்டையும் கதாபாத்திரங்களாய் எடுத்துக் கொண்டால் கூட தமிழகத்தில் அவற்றிற்கென பிரத்யேக பாடல்கள் கொடுத்து,


 இன்று வரை ஊடகங்கள், கச்சேரிகள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றில்  இப்பண்டிகைகள் இந்தப் பாடல்களைக் கொண்டே கொண்டாடும் வகையில் நிலையான சிறப்பு தன்மை வாய்ந்ததாக படைத்த பெருமை இசை ஞானியையே சேரும். 


முத்தாய்ப்பாக சொன்னால் முகம் தொலைந்தவர்களுக்கும் முகவரி தந்த மாண்பு இசை ஞானியை தான் சாரும்

Thursday, December 27, 2012

யுவன் ஏன் கொண்டாடப்பட வேண்டும்?


யுவன் ஏன் கொண்டாடப்பட வேண்டும்?
இன்றைய இளம் இசையமைப்பாளர்களை பட்டியலிட்டு, மிக சிறந்த திறமை, இசை ஆளுமை, இசை நுணுக்கங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அதில் பரிசு தர நாம் தயாரானால், முதல் பரிசு பெற தகுதியானவர் இளையராஜாவின்இளையராஜா யுவன் சங்கர் ராஜா தான் என்பதை நான் மிகவும் பெருமையுடன் சொல்வேன். சரி என்ன தான் சாதித்து விட்டார் இவர் என்ற கேள்விக்கு பதிலே இப்பதிவு!
ராஜாவிடம் இருக்கும் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, வேகமாக செயலாற்றும் திறன், கூரிய இசையறிவு ஆகிய அனைத்தும் யுவனிடம் ஒரு சேர அமைந்திருப்பது அவரது பலம். தன்னுடைய தந்தையின் பெருமையை பலர் அறிந்திருந்தாலும், இன்றைய இளஞ்சிறார்கள், யுவன் யுவதிகள் ஆகியோரிடத்து ராஜாவின் இசையறிவை கொண்டு சேர்த்ததில் யுவனின் பங்கு மகத்தானது என்று சொன்னால் அது மிகையன்று. குறிப்பாக 1990களில் பிறந்த குழந்தைகளுக்கு நல்ல இசையென்றால் எது என்று தெரியாமலேயே இருந்தது. புது இசை வடிவம் என்று சொல்லி இவர்களுக்கு புகுத்தப்பட்டதெல்லாம் நஞ்சு அன்றி வேறு இல்லை. இனிமையான இசை இவர்களுக்கு வாய்க்கவில்லை. பொருளாதார தாராளமயமாக்கல் காரணமாக இந்தியாவிலும், தமிழகத்திலும் புகுந்த பல சங்கதிகளில், புற்றீசலென வந்த ஊடகங்களும் அடக்கம்.  நல்ல இசை என்றால் M TVயில் வரும் இசை மற்றும்  Rap மட்டும் தான் போல என்ற மாயையை இளைஞர்களிடத்து புகுத்தியது இவ்வூடகங்கள்தாம். அப்போது தமிழகத்திலும் அந்த தாக்கம் மெல்ல மெல்ல பரவியது. அருமையான, இனிமையான, மனதை நல்வழிப்படுத்துகிற, சாந்தம் உருவாக்குக்கிற இசையை ராகதேவன் தந்து கொண்டு தான் இருந்தார். ஆனால் இவ்வூடகங்கள் திட்டமிட்டு இவரது இசையை இளந்தலைமுறையினரிடம் கொண்டு சேரா வண்ணம் நடந்து கொண்டன. ”தென்றல்தான்  இனிமை என்று காலங்காலமாக இலக்கியங்களிலும், கவிதைகளிலும் சொல்லப்பட்டு வந்த கருத்துக்கு எதிர்மாறாக புயல் தான் சிறந்தது என்ற கருத்து வலுக்கட்டாயமாக மக்கள மனதில் திணிக்கப்பட்ட து. பாவம், என்ன செய்வார்கள் இளைஞர்கள்? புயலால் பேரழிவு தான் என்ற உண்மையை அவர்களுக்கு எடுத்து சொல்ல யாருமில்லை, சொன்னாலும் செவிசாய்க்கவும் அவர்கள் தயாராக இல்லை. படு கேவலமான அலைவரிசையில் அமைக்கப்பட்ட, மனம் மாசுப்படுகிற தன்மை கொண்ட இசையை ஊடகங்கள் அவர்கள் மீது திணித்தன. சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஏற்படும் தீமைகள் போல், மனம் மாசுபடுவதால் உண்டாகும் கொடுமைகளும் ஆபத்தானவை. இப்படிப்பட்ட சூழலில் தான் 1996ல் யுவனின் இசை அறிமுகம் ஆனது. அரவிந்தன் படத்தில் வரும்   “ஈர நிலாபாடல் மூலம் எல்லோரையும் கவனிக்க வைத்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையாலும் இவர் ஈர்த்தார். எந்த இளைஞர் பட்டாளம் மட்டமான இசையால் வயப்பட்டிருந்ததோ, அதே இளைஞர் கூட்டத்தை தன்னுடைய இலக்காக கொண்டு இவர் இசையமைத்தார்.   2000 ஆண்டிலிருந்து மெல்ல மெல்ல இவரது ராஜ்யம் விரிவடைந்தது, இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை அமைத்து கொண்டிருக்கிறார்.
ராஜாவின் பின்னணி இசை திறமையை உலகறியும். ஆனால் அவரது திறமையான இசை, அவரது ரசிகர்கள் என்று அறியப்பட்ட நடுத்தர வயதினரிடம் மட்டும் சென்று அடைந்தது. அவரது இசை, இளைஞர்களில் பெரும்பான்மையானோரிடம் சென்று சேரவில்லை. இப்படிப்பட்ட சூழலில் யுவன் தன்னுடைய படங்களில் ராஜாவின் காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள், Theme Music ஆகியவற்றை புகுத்தினார்.
திரிஷா, ஆர்யா நடித்த சர்வம் திரைப்படத்தில், ராஜாவின் சாகா வரம் பெற்றபல்லவி அனு பல்லவிமற்றும் வாழ்க்கைபடத்தில் வரும்  “மெல்ல மெல்ல வந்துபாடல் இசையை யுவன் பயன்படுத்தினார். அந்த பின்னணி இசை, பின்னர் பெரும்பாலான mobile phoneகளில் caller tuneஆக மாறியது. அந்த இசை ராஜாவால் உருவாக்கப்பட்டது என்று தெரிந்த பின் இளைஞர்களுக்கு ராஜா இதையெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறாரா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது.
http://www.youtube.com/watch?v=UPzCxvVPiFE



பின்பு 2010ல் வெளிவந்ததீராத விளையாட்டுப் பிள்ளைபடத்தில் ராஜாவின்நெற்றிக் கண்படத்தின் Theme Music பயன்படுத்தி, ராஜாவை இன்றைய இளைஞரிடத்துபாருங்கடா, என் அப்பா எவ்வளவு பெரிய இசை மேதைஎன்று முழங்கினார்.
http://www.youtube.com/watch?v=YOcwBe7_Dhg

சத்தம் போடாதே படத்தில் “ How to Name It” இசைக் கோவையை பயன்படுத்தினார்.
7ஜி ரெயின்போ காலனி படத்தில்ஆசையை காத்துலே தூது விட்டேன்பாடலை பயன்படுத்தினார்.
http://www.youtube.com/watch?v=zCx5EGaTomU

சென்னை 600028 படத்தில் பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு பாடலை பயன்படுத்தினார்.
http://www.youtube.com/watch?v=GcBd4AzQxa0

சரோஜா படத்தில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடலையும், ”கோவாவில் அட மச்சான் மச்சான் பாடலில் இடம்பெறும்நாதிரின்னா, நாதிரின்னாஎன்ற Bit பயன்படுத்தினார்.
http://www.youtube.com/watch?v=-bado44xUR8

இவை சில உதாரணங்களே. அவருடைய பல படங்களில் ராஜாவின் பாடல்களையும், புகழ் பெற்ற பின்னணி இசைக் கோவைகளையும் யுவன் இன்றைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவற்றிற்கு மேலும் மெருகூட்டினார்.
இவையெல்லாம் யுவனால் மட்டும் தான் உலகுக்கு தெரிந்ததா, யுவனால் அடையாளம் காட்டப்பட வேண்டிய நிலையிலா ராஜா உள்ளார் என்று உங்களிடத்தில் எழும் கடுங்கோபமான கேள்வி எனக்கு புரிகிறது. நண்பர்களே, நான் அப்படி சொல்லவில்லை, ஆனால் இப்படிப்பட்ட அருமையான பாடல்கள் , இசை அமுதங்கள் 1990களுக்குப் பின் பிறந்த பெரும்பாலோனாருக்கு தெரியாதிருந்தது. சிலருக்கு தெரிந்திருந்தது என்றால், அச்சிலரின் பெற்றோர் தான் காரணம். அவர்களின் பெற்றோர், தம் பிள்ளைகளை ஆரோக்கியமான சூழலில் வளர்த்திருக்கிறார்கள் என்பது தான் காரணம். நான் சொல்வது மிகையன்று. நான், சில ஆண்டுகளுக்கு முன், சில நண்பர்களோடு ஒரு தனியார் தொலைக்காட்சியில் ராஜா சம்பந்தப்பட்ட இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, அந்நிகழ்ச்சியின்  ஒலி/ஒளிப்பதிவிற்கு வந்திருந்த இளம் பாடகி, நாங்கள் பாடவிருந்த பாடல்களை கேட்டு விட்டு, இதையெல்லாம் நான் கேட்டதேயில்லை என்று கூற எனக்கு மிகுந்த வருத்தமே மேலோங்கியது. இளைஞர்கள் என்று இல்லை, ராஜா ரசிகர்களாய் நெடுங்காலமாக இருக்கும் சிலருக்கும் கூட அவருடையபிச்சை பாத்திரம்பாடல் நான் கடவுள் படம் வந்த பின் தான் தெரிந்தது. அவர் அப்பாடலை 1996-97லியே ரமண மாலை ஆல்பத்தில் பாடியுள்ளார்.
ஆனால் இன்றைக்கு நிலை மாறியுள்ளது. ராஜாவின் இத்தகைய சிற்சில பாடல்களை கேட்ட பின்பு, இளைஞர்கள் ராஜாவின் ஏனைய இசை அமுதங்களை, download செய்தாவது கேட்கின்றனர். யுவனின் Trend பின்பற்றி சுப்ரமணியபுரம் படத்தில்சிறு பொன்மணி அசையும்பாடலை இயக்குனர் சசிகுமாரும், பசங்க படத்தில்காளிதாசன், கண்ணதாசன்பாடலை இயக்குனர் பாண்டிராஜும் பயன்படுத்தினர். சிறு பொன்மணி அசையும் பாடல், சுப்ரமணியபுரம் படத்தின் காதல் காட்சிகளுக்கு எத்தகைய இனிமையை கொடுத்தது என்பதை படம் பார்த்தவர்கள் உணர்ந்திருப்பர். அப்பாடல் பல Mobile Service Providerகளின் Caller Tune listல் சேர்க்கப்பட்ட தும் அதற்கு பின்பு தான்.
திரு. M.S.V, திரு. கே.வி. மகாதேவன் போன்றோரின் மைந்தர்கள் திரையுலகில் பிரவேசிக்கவில்லை, அதனால் தான் அவர்களுடைய முத்தான முத்தான பாடல்கள் இன்றைய இளைஞர்களுக்கு தெரியவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் சில குறிப்பிட்ட பாடல்கள் மட்டுமே தெரியுமேயன்றி மற்ற பிற பாடல்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. யுவன் போன்று அவர்களுக்கும் ஒரு மைந்தன் கிடைத்திருந்தால், அவர்களின் பாடல்கள் எத்தகைய சிறப்பு தன்மை வாய்ந்தவை என்று இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்கும்.  திரு.எம்.எஸ்.வி பற்றி ராஜாவை தவிர யாரும் இப்போதெல்லாம் பேசுவதில்லை. ஏன், அவரோடு பணியாற்றிய இயக்குனர்களும் கூட பேசுவதில்லை  1992ல் இருந்து நம்முடைய புலனுக்கு சம்பந்தமில்லாத இசையெனும் பெயரால் நஞ்சை பருகி வரும் இளைஞர்களுக்கு அமுதத்தை அளிக்கும் பணியை செய்யும் மகத்தானவர் யுவன் சங்கர் ராஜா அவர்கள்.
யுவனோடு எதிர்காலத்தில் கார்த்திக் ராஜா மைந்தன் யதிஷ்வர் கூட இசைப்பணியில் ஈடுபடும்போது ராஜாவின் இசை பல தலைமுறைகளை கடந்து நிற்கும் என்பது திண்ணம்.
இப்பதிவு உங்களுக்கு கோபத்தை உண்டாக்குவதற்கு எழுதப்பட்டதல்ல. நான் இசைத்தட்டு, ஒலி நாடா விற்பனையில் பல காலம் இருப்பதால், பல வாடிக்கையாளர்களோடு பழகுவதால் இன்றைய வெகுஜன ரசனையின் நாடித்துடிப்பே இப்பதிவு. 
இதற்கெல்லாம் அத்தாட்சியாக  23/12/2012 அன்று கோவையில் நடந்த இசை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராஜாவே, K.V. Mahadevan, M.S.V, Ilaiyaraja listல் அடுத்து வருபவர் யுவன் என்று தெரிவித்தார். சுருக்கமாக சொன்னால் ராஜாவின் இசையை இன்றைய சிறார்க்கு, தலைமுறைக்கு எடுத்து சென்றவர் யுவனே!!!